Sunday, April 22, 2018

என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு என்எல்சி சார்பில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்றுக் குடியிருப்பை அந்த நிறுவனம் வழங்குவதுடன், வாரிசுகளுக்கு பல்வேறு சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. இதுதொடர்பாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, தற்போது முதியோர் பராமரிப்பு மற்றும் அலுவலகப் பராமரிப்புக்கான சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. நெய்வேலி வட்டம் 6-இல் உள்ள ஆனந்தம் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, என்எல்சி மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சங்கர் தொடக்கி வைத்தார். சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் சேகர், துணைப் பொது மேலாளர் கே.ரமேஷ் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

முதியோரைப் பராமரித்தல் தொடர்பாக 3 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், அலுவலகப் பராமரிப்பு தொடர்பாக 2 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், மொத்தம் 60 பேர் இணைந்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆனந்தம் இல்லத்தில் நடைபெறும். முதியோர் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையிலும், அலுவலகப் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் செய்முறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகையாக தினமும் ரூ.100 வழங்கப்படும். இதற்காக என்எல்சி நிறுவனம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு மையம் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். பயிற்சி வகுப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் வி.அருள்செல்வம், ஆர்.மாலதி, ஒருங்கிணைப்பாளர் ஜே.கிருஷ்ணன் ஆகியோர் நடத்த உள்ளனர்.

இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இப்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இருமுறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது.

தேர்வர்களுக்கு இதனால் ஏற்படும் பண விரயம், காலவிரயத்தினை வெகுவாகக் குறைக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை (Original Certificate) ஸ்கேன் செய்து அவற்றை பதிவேற்றம் செய்யும் முறையினை தேர்வாணையம் தற்போது முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த நடைமுறையானது, வரும் 23 -ஆம் தேதி நடைபெறும் குரூப் -2ஏ பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், மே 4 -ஆம் தேதிக்கு முன்பாக தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஐந்து ரூபாய் கட்டணம்:

தற்கென மூலச் சான்றிதழ்களின் (Original Certificate) ஸ்கேன் படிமத்தின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து தாலுகா, தலைநகரங்களிலும் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக பொதுச் சேவை மையங்களில் வசூலிக்கப்படும்.

இந்தப் புதிய நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித் தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதுமானது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் கால மற்றும் பண விரயம் வெகுவாகக் குறையும்.

பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்:

மூலச் சான்றிதழ்களின் தெளிவான வண்ணப்படிமம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும். விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் பொதுச் சேவை மையங்களின் பட்டியல் முகவரியுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வின் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் படிமநகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முன்பு சான்றிதழ்களின் படிமநகல் தெளிவாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவருக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கருதி அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தால் போதுமானது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்குப் பிறகு அதற்கான இணையப் பக்கம் முடக்கப்படும். இணைய வழியன்றி ஏனைய அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு: வரும் 25-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25-இல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோருக்கு நேர்காணல் கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 19 வரையில் நடந்தது. 1,094 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 3 வரையில் நடந்தது. 

முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...